'நான் அவன் இல்லை' பட பாணியில் 27 பெண்களை மணந்தவர் மீது அமலாக்கத்துறை வழக்கு

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பத்து மாநிலங்களில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒடிசா நபர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஸ் ஸ்வைன்(66). இவருக்கு பிபு பிரகாஷ் ஸ்வைன் என்ற பெயரும் உண்டு. இவர் கடந்த 2006-ம் ஆண்டு 128 போலி கிரெடிட் கார்டுகள் மூலம், கேரளாவில் உள்ள 13 வங்கிகளில் ரூ.1 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளார். இவர் தன்னை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் துணை இயக்குனராக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.

நிதி மோசடி

கடந்த 2011-ம் ஆண்டு ஹைதராபாத்தில் சிலரிடம் அவர்களின் பிள்ளைகளுக்கு எம்.பி.பி.எஸ் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார். திருமண வெப்சைட்களில் வரன் தேடி 10 மாநிலங்களில், 27 பெண்களை இவர் திருமணம் செய்துள்ளார்.

இந்த பெண்களில் சிலர் அரசு உயர் அதிகாரிகளாகவும், டாக்டர், வக்கீல்களாகவும் இருந்துள்ளனர். ஒருவர் இந்தோ-திபெத் எல்லை போலீஸில் உதவி கமாண்டன்ட்டாக பணியாற்றுகிறார். ஒருவர் அசாமில் டாக்டராக பணியாற்றுகிறார். மற்றொருவர் சத்தீஸ்கரில் பட்டய கணக்காளராக உள்ளார். இரு மனைவிகள் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், ஒரு மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர், இன்னொரு மனைவி கேரள அரசு அதிகாரி.

‘நான் அவன் இல்லை’

திருமணம் முடித்தபின் மனைவிகளிடம் பணத்தை கடனாக பெற்று, ‘நான் அவன் இல்லை’ பாணியில் தப்பிச் சென்று அடுத்த மனைவியை தேடியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மட்டும் 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து 3 மனைவிகளை ஒரே நேரத்தில் குடியமர்த்தியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த இவரது மனைவி இவரது மோசடி குறித்து கடந்த 2021-ம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார். அப்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா போலீஸாரும் ரமேஸ் ஸ்வைனின் நடவடிக்கைகளை 8 மாதங்களாக கண்காணித்து, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கைது செய்தனர். அவரது மனைவிகளில் ஒருவரான டாக்டர் கமலா சேதி உட்பட சிலரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை ரமேஷ் ஸ்வைன் மீது நிதி மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது. ஒடிசா போலீஸாரை தொடர்பு கொண்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், ரமேஸ் ஸ்வைனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். இவரது பண பரிமாற்றங்களை எல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE