கருப்பு உடையணிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் - அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ராகுல் காந்தியின் பதவி தகுதி இழப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ராகுல்தகுதி இழப்பு, அதானி விவகாரங்களைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் சத்யமேவ ஜெயதே என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவிலான பதாகையையும் அவர்கள் ஏந்தி வந்தனர். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம் என்றும் பதாகைகளை அவர்கள் கைகளில் வைத்திருந்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் பகுதி வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல், மதிமுக, கேரள காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, சிவசேனா (உத்தவ் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

சபாநாயகர் மீது காகிதம் வீச்சு: நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானி, ராகுல் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் 2 வாரங்களாக நாடாளுமன்ற அவைகள் முடங்கின. இந்நிலையில் நேற்று காலை மக்களவை தொடங்கியதும், ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதியிழப்பு விவகாரத்தை கருப்பு உடையணிந்து வந்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்துமத்திய அரசைக் கண்டித்து கோஷம்எழுப்பினர். அப்போது சபாநாயகரை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், ஹிபி எடன் ஆகியோர் பதாகைகளையும், காகிதங்களையும் தூக்கி வீசினர்.

இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியின் காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரையும், அதன் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்: வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் என்ற முறையில் ராகுல் காந்திக்கு டெல்லி துக்ளக் லேன் பகுதியில் 12-ம் எண் கொண்ட அரசு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில்தான் ராகுல் காந்தி தங்கியிருந்தார்.

இந்நிலையில் அவமதிப்பு வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை வீட்டு வசதிக் குழு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் அவர் தான் தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE