புதுடெல்லி: நிலத்தை வாங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் சிபிஐ முன்பு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று ஆஜரானார்.
தேஜஸ்வி யாதவ் பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்(யுபிஏ) மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார்.
அப்போது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
» புதிய வந்தே பாரத் ரயில் திருப்பதியில் ஏப்.8-ல் தொடங்குகிறது
» புதிய வரி முறையின் கீழ் வருமானம் ரூ.7 லட்சத்தைவிட சற்று கூடுதலாக இருந்தால் நிவாரணம்
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் கடந்த 15-ம் தேதி ஆஜராயினர். அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்குக்காக நேற்று லாலு பிரசாத் யாதவின் மகனும், பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். காலை 10.30 மணிக்கு அவர் சிபிஐ அலுவலகத்தில் நுழைந்தார். அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி பதில்களை பதிவு செய்துகொண்டனர்.
4-வது சம்மன்: ஏற்கெனவே 3 முறை சம்மன் அனுப்பியும், தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன்பு ஆஜராகவில்லை. தற்போது 4-வது முறையாக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அவர் ஆஜராகியுள்ளார். அதேநேரத்தில் இதே வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி நேற்று காலை ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.