மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12,815 கோடி கூடுதல் செலவாகும்.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு கூடுதல் தவணைகள் விடுவிக்கப்படும். மேலும் 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதனால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE