அவசர சட்டத்தை ஆதரித்திருந்தால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்பியிருக்கும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2013-ம் ஆண்டில் வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பால் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. அவருக்கும் உதவும் வகையில் அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி குற்றவியல் வழக்கில் எம்.பி., எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் 90 நாட்கள் அவர்கள் பதவியில் நீடிக்க முடியும். மேல் நீதிமன்றங்களில் முறையிட்டு நிவாரணம் பெற முடியும்.

அன்றைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அவசர சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவசர சட்டத்தின் நகலை கிழித்தெறிந்தார். அவசர சட்டம் முட்டாள்தனமானது என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார். இதன்காரணமாக அந்த அவசர சட்டம் கைவிடப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டம் இப்போது அமலில் இருந்திருந்தால் ராகுலின் எம்பி பதவி பறிபோகாமல் இருந்திருக்கும். எனினும் தவறு செய்தவர்கள் உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த அவசர சட்டத்தை ராகுல் எதிர்த்தார் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE