ஐஐஎம் மாணவருக்கு ரூ.1.14 கோடி சம்பளம்

By செய்திப்பிரிவு

இந்தூர்: மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஐஐஎம் மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தூர் ஐஐஎம்- மையத்தில் படித்த மாணவருக்கு, ஒரு நிறுவனம் உள்நாட்டில் ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.

எங்கள் மையத்தில் இந்தாண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுதான். கடந்தாண்டு ஒரு மாணவனுக்கு அதிகபட்சமாக வழங்கப்பட்ட சம்பளம் ரூ.49 லட்சம். இந்தாண்டில் ரூ.65 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது. இந்தாண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 160-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்கள் எங்கள் மாணவர்கள் 568 பேருக்கு சராசரியாக ரூ.30.21 லட்சம் சம்பளம் வழங்கியுள்ளனர்.

இந்த வாய்ப்பை பெற்ற மாணவர்களில் இரண்டாண்டு முதுநிலை மேலாண்மை படிப்பு மற்றும் 5 ஆண்டு மேலாண்மை படிப்பு (ஐபிஎம்) முடித்தவர்களும் அடங்குவர். இந்த இரண்டு பாடப் பிரிவுகளும் எம்பிஏ.,வுக்கு நிகரானதாக கருதப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE