பாட்னா: பிஹார் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா நகர ரயில் நிலைய சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகளில்ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் இருந்த நேரத்தில் சுமார் 3 நிமிடங்களுக்கு இந்த வீடியோ ஒளிபரப்பானதாக தகவல்.
இந்திய நாட்டின் மிகவும் பிஸியான ரயில் நிலையங்களில் பாட்னா ரயில் நிலையமும் ஒன்று. ஏனெனில், பிஹார் மாநிலத்தை சேர்ந்த மக்கள் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு வந்து செல்ல இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்தச் சூழலில் ஞாயிறு அன்று இந்த ஆபாச வீடியோ ரயில் நிலைய டிவி பெட்டிகளில் ஒளிபரப்பாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆபாச படம் ஒளிபரப்பாகி வருவதாக பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே அது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள டிவி பெட்டிகளில் வீடியோ மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்ப தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இது அறவே சகிக்க முடியாத செயல் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ ஒளிபரப்பான போது தங்களது மொபைல் போனில் அதை படம் பிடித்த பயணிகள், அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். அது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும், இதில் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரையும் சில பயனர்கள் டேக் செய்துள்ளனர்.