கீழவல்லூர்: கேரள மாநிலத்தில் கார் மீது மோதிய அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தேவாலய சுவரை மோதி தகர்த்தது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழவல்லூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. விபத்தின்போது பதிவான சிசிடிவி காட்சி இப்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 37 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் கண் இமைக்கும் நொடிப் பொழுதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதிவேகமாக முன்புறம் சென்ற வாகனத்தை முந்துகிறது அந்தப் பேருந்து. அப்போது எதிரே வந்த காரின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் இருந்த தேவாலய சுவரில் மோதி நிற்கிறது. சனிக்கிழமை மதியம் 1.50 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பத்தனம்திட்டாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இந்த பேருந்து சென்றுள்ளது. 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்.