‘மார்பிங்’ படங்களுடன் பெண் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெண் நீதிபதி ஒருவர் கடந்த மாதம் 7-ம் தேதி நீதிமன்ற அறையில் இருந்தபோது, அவருக்கு ஒரு பார்சல் வந்தது. பெண் நீதிபதியின் குழந்தை படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பார்சல் வந்துள்ளதாக கூறி அதனை நீதிபதியின் சுருக்கெருத்தாளரிடம் இளைஞர் ஒருவர் கொடுத்துள்ளார்.

பார்சலை திறந்தபோது அதில் சில இனிப்புகளுடன் பெண் நீதிபதியின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளன. அதில் இருந்த கடிதத்தில், “ரூ.20 லட்சத்துடன் தயாராக இரு. இல்லாவிடில் இந்தப் படங்களை வெளியிட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் அவமானப்படுத்துவேன். இடமும் நேரமும் பிறகு சொல்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

இதனால் பெண் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டுக்கு இதுபோல் மற்றொரு பார்சல் வந்துள்ளது. இதையடுத்து போலீஸில் பெண் நீதிபதி புகார் அளித்தார். இது தொடர்பாக கடந்த 28-ம் தேதி வழக்கு பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பார்சலை கொண்டுவந்து கொடுப்பது தெரிகிறது. அவரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE