அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஒன்றாகப் பார்த்து ரசித்தனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் பிரதமராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக 4 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை தரையிறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் அவர் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஹோலி பண்டிகையில் பங்கேற்றார்.
அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியை நேரில் ரசிக்க பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸும் வருகை தந்தனர். இருவருக்கும் மைதானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு
வாகனத்தில் இருவரும் மைதானத்தை சுற்றி வந்தனர்.
» நீட்டா அம்பானி தொடங்கிய பெண்கள் முன்னேற்றத்துக்கான வலைதளம் - 31 கோடி பயனாளரை சென்றடைந்து சாதனை
இதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டர் ரோஹித் சர்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு தொப்பியை பரிசளித்தார். இதேபோல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சிறப்பு தொப்பியை வழங்கினார்.
இரு அணிகளின் தலைவர்களும், டாஸ் போடுவதற்காக மைதானத்துக்கு சென்றபோது இந்திய பிரதமரும், ஆஸ்திரேலிய பிரதமரும் நட்புறவு கூடத்துக்கு நடந்து சென்றனர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சிறப்புமிக்க கிரிக்கெட் வரலாறு பற்றி இரு தலைவர்களிடம் விவரித்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணிகளின் கேப்டன்களும், இரு நாடுகளின் பிரதமர்களுடன் மைதானத்தை நோக்கி சென்றனர். வீரர்களின் அறிமுகத்துக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன்பிறகு இந்திய பிரதமரும், ஆஸ்திரேலிய பிரதமரும் இருக்கைக்கு சென்றனர். இருவரும் ஒன்றாக கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தனர். இந்த புகைப்படங்கள், வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
சுமார் அரை மணி நேரம் கிரிக்கெட் போட்டியை ரசித்த பிரதமர் மோடி பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக மாநில தலைவர் சி.ஆர். பாட்டீல் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அகமதாபாத்தில் இருந்து நேற்று மும்பைக்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மும்பை கடற்படைத் தளத்தில் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை அவர் பார்வையிட்டார்.