ஆந்திராவில் கோதண்டராமர் திருக்கல்யாணம் - முதல்வர் ஜெகன் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்

By என். மகேஷ்குமார்

கடப்பா: ஆந்திராவின் கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் பழங்கால மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்த கோயிலை தனது கட்டுப்பாட்டில் பராமரித்து வருகிறது.

ஒவ்வொரு ஸ்ரீராம நவமிக்கும், ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். தற்போது ஸ்ரீராம நவமி நெருங்குவதால், பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் கோயில் அலுவலக வளாகத்தில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கடப்பா மாவட்ட ஆட்சியர் விஜயராம ராஜு, எஸ்பி அன்புராஜன் மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர் குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி பேசியதாவது: வரும் மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை கோயிலில் ஸ்ரீராம நவமி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனை
யொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் வரும் 16-ம் தேதிக்குள் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மோற்சவத்தில் ஏப்ரல் 5-ம் தேதி சீதாதேவி சமேத ராமருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதற்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களையும், முத்துஅட்சதைகளையும் காணிக்கையாக வழங்க உள்ளார். இவ்வாறு தர்மா ரெட்டி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE