பிக்பாஸ் நடிகைக்கு மிரட்டல் - பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தி பிக் பாஸ் 16வது நிகழ்ச்சியில் நடித்த அர்ச்சனா கவுதம் என்பவரிடம் அத்துமீறியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தி பிக் பாஸ் 16-வது நிகழ்ச்சியில் பங்கேற்றவர் அர்ச்சனா கவுதம். இவர் சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது பிரியங்காவின் உதவியாளர் சந்தீப் சிங் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இது குறித்த தகவலை வெளியிட்டால் கொன்றுவிடுவதாகவும் கூறினார்.

சந்தீப் சிங் மீது போலீஸில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். அர்ச்சனா கவுதமுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸில் புகார் அளித்ததாக அர்ச்சனாவின் தந்தை தெரிவித்தார். இதையடுத்து சந்தீப் சிங் மீது மீரட் போலீஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பேஸ்புக்கில் அர்ச்சனா கூறியிருப்பதாவது: சந்தீப் சிங் தன்னிடம் அத்துமீறிய சம்பவம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே நடந்தது. இதை பிரியங்காவிடம் சொல்வதற்காக நீண்ட காலமாக காத்திருந்தேன். ஆனால், இதை மறைக்க கட்சியில் உள்ளவர்கள் விரும்பினர். நான் பிரியங்காவை சந்திக்க சந்தீப் சிங் அனுமதிக்கவில்லை. நான் பிரியங்காவை சந்தித்து விஷயத்தை சொல்ல முயன்றபோது, அதை அவர்கள் தடுத்தனர். இது குறித்து பேச அவர்கள் பயந்தனர். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE