மதுபானக்கொள்கை ஊழல் வழக்கு | சிறையிலிருக்கும் சிசோடியாவிடம் இன்று 2ஆம் கட்ட விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபானக்கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிறையில் வைத்து இன்று இரண்டாவது கட்ட விசாரணை நடத்துவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ கடந்த பிப். 26ம் தேதி தெரிவித்திருந்தது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணைக்கு பின் சிபிஐ, சிசோடியாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து அவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லியின் முன்னாள் துணை முதல்வரான மணீஷ் சிசோடியவை திஹார் சிறையிலுள்ள அறை எண் 1ல் வைத்து விசாரணை நடத்த உள்ளூர் நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை அனுமதி பெற்றிருந்தது. மணீஷ் சிசோடியா டெல்லியின் கலால் துறை அமைச்சராக இருந்தபோது அவரிடமிருந்த செல்போன்கள் அடிக்கடி மாற்றப்பட்டு அதில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும், மதுபானக் கொள்கை அமலாக்கம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. புதிய மதுபான கொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE