எடியூரப்பா பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பதற்றம்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது குப்பைகள் காற்றில் பறந்ததால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, விஜய் சங்கல்ப யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கலபுரகிக்கு சென்றார். கலபுரகியில் உள்ள ஜெவார்கி மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

ஆனால் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென பலத்த காற்று வீசியதால் அங்கு குவிந்திருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் காற்றில் பறந்தன. இதனால் சமயோஜிதமாக செயல்பட்ட விமானி, ஹெலிகாப்டரை தரை இறக்காமல் மேல் நோக்கி பறக்கச் செய்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் பிறகு, காற்றின் வேகம் குறைந்த உடன்ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் கலபுரகியில் பாஜகவினர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE