அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் குஜராத் அரசு ஏற்பாடு செய்திருந்த "ரோஜ்கார் மேளா" என்ற வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. பல துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு திறன்மிகு பணியாளர்களை அதிக எண்ணிக் கையில் உருவாக்க வேண்டியது தற்போது அவசியமாகி உள்ளது. நமது இளைஞர்களுக்கு திறன்மிகு பயிற்சியை அளிப்பதன் மூலமாக மட்டுமே இந்தியா உலகப் பொருளாதாரத்தில் தற்போதுள்ள 5 வது இடத்திலிருந்து 3 வது இடத்துக்கு முன்னேறும் இலக்கை சாத்தியமாக்க முடியும். இந்தியா கடந்த ஆண்டில்தான் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது.
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 18 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்ட இந்த ரோஜ்கார் மேளாவில், 2,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.