தெலங்கானா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தேசிய பறவையான மயில்கள் கொல்லப்பட்டு வருகின்றன. இதில் வாரங்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 45 மயில்கள் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் வேட்டைக்காரர்களுக்கு வனத்துறையினர் வலை விரித்துள்ளனர்.
தெலங்கானா மாவட்டங்களான கரீம் நகர், ரங்காரெட்டி மாவட்டங்களில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. இவைகளுக்கு வேட்டைக்காரர்கள் விஷ உணவு கொடுத்து கொன்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், சீடூரு கிராமத்தில் திங்கள்கிழமை 45 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதனை கண்ட கிராமத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்டுச் சென்றனர். முதல்கட்ட விசாரணையில் வேட்டைக்காரர்கள் விஷ உணவு கொடுத்து இவற்றை கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே வேட்டைக்காரர்களை பிடிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.