மணீஷ் சிசோடியா கைது விவகாரம் | சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லிமாநில துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். டெல்லி யில் கடந்த 2021-22ல் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே, அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், இது தொடர்பாக பிரமதர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிஹார் துணை முதல்வர்தேஜஸ்வி யாதவ், சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ்தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சித்தலைவர் ஃபரூக் அப்துல்லாஆகியோர் கையெழுத்திட் டுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது:

இந்தியா தற்போதுவரை ஜன நாயக நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்பு கிறோம். அண்மையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோ டியா கைது செய்யப்பட்டார். இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்க்கும்போது, நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்துக்கு மாறவிட்டதையே காட்டுகிறது.

மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது. டெல்லி கல்வித் துறையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் மணீஷ் சிசோடியா. அவரது கைது விவகாரத்தை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே உலகம் பார்க்கிறது. பாஜக ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயக மதிப்பீடுகள் அச்சுறுத்தலின் கீழ்இருப்பதாகவே உலகம் சந்தேகிக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், சஞ்சய் ராவத், அசாம் கான், நவாப் மாலிக், அனில் தேஷ்முக், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்குகள் தொடரப்படுகின்றன.

மத்திய விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவில் சேர்ந்ததும் அவர்களுக்கு எதிரான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மென்மையாகக் கையாளுகின்றன. இதற்கு தற்போதைய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவே உதாரணம்.

கடந்த 2015-ல் அவர் பாஜகவில் சேர்ந்த பிறகு அவருக்கு எதிராக விசாரணை அமைப்புகள் கடுமையாக நடந்துகொள்ள வில்லை.

இதேபோல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக செயல்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பை அவர்கள் திட்டமிட்ட ரீதியில் சீர்குலைக்க முயல்கின்றனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, டெல்லி மாநில ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கையே கொண்டுள்ளனர். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதன் காரணமாக, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE