நிலக்கரி ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By எம்.சண்முகம்

நிலக்கரி ஊழல் வழக்கு தொடர் பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி ஊழல் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எம்.பி.லோக் கூர், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், சிபிஐ சார்பில் வழக்கறிஞர் அமரேந்திர சரண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்குகள் முக்கியத்துவம் உள்ளதாக இருப்பதால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றம் அமைக்க டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி ஒருவரையும் நியமித்து ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு பதில் அளிக்கும்படி உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஒரு மனதாக நிலக்கரி ஊழல் வழக்குக்கான சிறப்பு அரசு வழக்கறிஞரை பரிந்துரைக்கும்படி நீதிபதிகள் கேட்டனர். முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தை நியமிக்கலாம் என்று தெரிவித்தபோது, இதுகுறித்து வழக்கறிஞர்கள் அவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிபதியை முடிவு செய்து டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE