மாவோயிஸ்ட்டுகளுக்கு நிதியுதவி வழங்கியவரின் 152 வங்கி கணக்கு முடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு நிதியுதவி வழங்கியவரின் 152 வங்கிக் கணக்குகள் மற்றும் பரஸ்பர நிதி கணக்கை என்ஐஏ முடக்கி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம், லடேகர் நகரில் காவல் துறை வாகனம் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களுடைய ஆயுதங்களையும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் சந்தோஷ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவருமான மிருத்யுஞ்சய் குமார் சிங்குக்கும் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இவர் மாவோயிஸ்ட் அமைப்பினரின் செயல்பாடுகளுக்கு நிதியுதவி செய்து வந்ததும் தெரியவந்தது. மேற்கண்ட தாக்குதல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு கூட ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார்.

மதிப்பு ரூ.20.6 கோடி: இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மிருத்யுஞ்சய் குமார் சிங்குக்கு சொந்தமான 152 வங்கிக் கணக்குகள் மற்றும் ஒரு எஸ்பிஐ பரஸ்பர நிதி கணக்கை முடக்கி உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.20.6 கோடி
ஆகும். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE