கேம்ப்ரிட்ஜ் பல்கலை. விரிவுரைக்காக ராகுல் காந்தி புதிய தோற்றம்: இந்திய ஒற்றுமை யாத்திரைக்குப் பின் முடித்திருத்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் முதல்முறையாக, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் விரிவுரையாற்ற செல்கிறார் ராகுல் காந்தி. இதற்காக அவர் தலைமுடி, தாடியை திருத்தம் செய்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை லண்டன் சென்றார். இந்த பயணத்தில், ராகுலின் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மாணவர்களுக்கு மட்டும் எடுக்க இருக்கும் விரிவுரையும் அடங்கும்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் (ஜேபிஎஸ்) கவுரவ விரிவுரையாளராக இருக்கும் ராகுல் காந்தி, "21ம் நூற்றாண்டின் கேட்டலுக்கான கற்றல்" (Learning to Listen in the 21st Century) என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் புதிய தோற்றத்தில் லண்டன் சென்றுள்ள அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த படங்களுக்கு #NewLook என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்துகின்றனர். இந்தப் படங்களில், இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது வளர்ந்த தாடியை ட்ரிம் செய்தும், தலைமுடியை வெட்டியும் புதிய தோற்றத்தில் உள்ளார்.

முன்னதாக, 52 வயாதகும் இந்த காங்கிரஸ் தலைவர் கடந்தாண்டு செப்., மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்ததினார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 12 மாநிலங்களிஸ் சுமார் 4,000 கிலோ மீட்டர் வரை நடைபெற்றது.

கேம்ப்ரிட்ஜில், பல்கலைக்கழகத்தின் கார்பஸ் க்ரிஸ்டி கல்லூரியின் வழிகாட்டி மற்றும் சர்வதேச மனித உரிமை முன்னெடுப்பு துறையின் இணை இயக்குநருமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர், ஸ்ரூதி கபிலாவுடன் இணைந்து, பெரிய தரவுகளும் ஜனநாயகமும், மற்றும் இந்தியா - சீனா உறவு குறித்து அரங்கிற்குள் விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தநிலையில், கேம்ப்ரிட்ஜ் ஜேபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,"எங்களது கேம்ப்ரிட்ஜ் எம்பிஏ திட்டம், இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல்காந்தியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது" என்று பதிவிட்டுள்ளது.

இந்த ட்வீட்டை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "எனது பழைய கல்லூரியான கேம்ப்ரிட்ஜ்-க்கு வருவது மகிழ்ச்சியை தருகிறது. புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், பெரிய தரவுகள், ஜனநாயகம் உள்ளட்ட பல்வேறு தளங்களில் திறந்த மனதுடன் உரையாற்ற இருப்பது மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த மே மாதம் லண்டன் சென்ற போது, கேம்ப்ரிட்ஜி கார்ப்ஸ் கிருஷ்டி கல்லூரியில், இந்தியா 75 என்ற தலைப்பில் உரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE