மதுபான கொள்கை வழக்கு: கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.

மதுபான ஊழல் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்தநிலையில், சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவினை அவசர வழக்காக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒயி சந்திரிசூட் முன்பு கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிகிறது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்த சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா நேற்று (பிப்.27) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பங்கஜ் குப்தா கூறும்போது, “புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரினார்.

மணீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தயான் கிருஷ்ணன், மோகித் மாத்தூர், சித்தார்த் அகர்வால் ஆகியோர் கூறும்போது, “துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகே புதியமதுபான கொள்கை அமலுக்கு வந்தது. சிசோடியா நிதியமைச்சராக உள்ளார். அவர் டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியபொறுப்பு இருக்கிறது. இந்த வழக்கு சிசோடியாவுக்கு எதிரான சதித் திட்டம்’’ என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக்பால், சிபிஐ கோரியபடி மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE