இன்னிங்ஸ் நிறைவு பெற்றதாக அறிவிப்பு - அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு?

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: ‘‘பாரத ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவு பெற்றுள்ளது’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த 2-வது நாள் மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது:

பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. பிரிவினை தூண்டப்பட்டு, ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக பாரத ஒற்றுமை யாத்திரை அமைந்துள்ளது. நல்லிணக்கம் சகிப்புத்தன்மை, சமத்துவத்தை வலியுறுத்தி பெருந்திரளான மக்கள் அதில் பங்கேற்றனர்.

பாரத ஒற்றுமை யாத்திரையுடன் எனது ‘இன்னிங்ஸ்' (அரசியல் பயணம்) நிறைவு பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தொண்டர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

எனது ‘இன்னிங்ஸ்' நிறைவு பெற்றது என்று கூறியுள்ளதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட மாட்டார். அவர் வழக்கமாக போட்டியிடும் ரேபரேலியில் அவரது மகள் பிரியங்கா காந்தி களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE