புதுடெல்லி: டெல்லி மேயர் தேர்தல் நீண்ட இழுபறிக்கு பின்னர் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி மாநகராட்சிக்கு 6 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது.
தேர்தலுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு ஆம் ஆத்மியைச் சேர்ந்த கவுன்சிலர் பவன் ஷெராவத், பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, பொதுச் செயலாளர் ஹர்ஷ் மல்கோத்ரா முன்னிலையில் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
இதுகுறித்து பவன் ஷெராவத் கூறும்போது, “டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களிடையே கருத்து வேறுபாடும் உள்ளது. மாநகராட்சி கூட்டத்தின்போது கோஷம் எழுப்புமாறு எனக்கு அழுத்தம் தரப்பட்டது. இதன்மூலம் தேர்தலை தள்ளிப் போடுவது அவர்கள் எண்ணமாக இருந்தது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்தவரை எனக்கு மூச்சு முட்டும் அளவுக்கு அழுத்தம் தரப்பட்டது" என்றார்.