மோர்பி பால விபத்து எதிராலி - குஜராத்தில் பழைய பாலங்களை புதுப்பிக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதி மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் அறுந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். நாட்டில் அண்மைக்காலத்தில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது.

இப்பாலத்தின் சீரமைப்பு பணியை, சுவர் கடிகாரங்கள் மற்றும் இ-பைக்குகள் தயாரிக்கும் ஓரேவா நிறுவனம் மேற்கொண்டது. சீரமைப்பு பணிக்கு பிறகு மோர்பி நகராட்சியின் தகுதிச் சான்றிதழை பெறாமலேயே பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் திறக்கப்பட்ட 5 நாட்களில் பாலம் உடைந்தது.

இந்த விபத்தில் இறந்தவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 2 லட்சமும் இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என ஒரேவா குழுமத்துக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில் குஜராத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு பிறகு புதிய அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் கனுபாய் தேசாய் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், குஜராத்தில் பழைய பாலங்களை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 5 நெடுஞ்சாலைகளை அதிவேக சாலைகளாக மேம்படுத்த ரூ.1,500 கோடியும், காந்திநகரில் கிஃப்ட் சிட்டிக்கு அருகில் சபர்மதி ஆற்றங்கரை மேம்பாட்டுக்கு ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE