ரூபாவிடம் ரூ.1 கோடி கேட்டு ரோஹினி சிந்தூரி மானநஷ்ட வழக்கு - மார்ச் 7-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

By இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ், தனது தனிப்பட்டபுகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

சசிகலா மீது சிறை முறைகேடு புகாரை தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா, க‌ர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மீது ஊழல், நிர்வாக முறைகேடு, ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டினார். அவர் மீது கர்நாடக தலைமைச் செயலரிடம் 19 விதமான புகார்களை தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த ரோஹினி சிந்தூரி தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ரூபா மீது தலைமைச் செயலர் மற்றும் மைசூரு போலீஸாரிடம் புகார் அளித்தார். மேலும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ரூபாவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனிடையே மோதலில் ஈடுபட்ட ரூபா ஐபிஎஸ், ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மற்றும் ரூபாவின் கணவரும் நில அளவியல் மற்றும்புள்ளியியல் துறை ஆணையருமான மோனிஷ் மோத்கில் ஆகியோரை கர்நாடக அரசு பணியிட மாற்றம் செய்தது.

இந்த சூழலில் ரோஹினி சிந்தூரி பெங்களூரு மாநகர 74-வது குடிமையியல் நீதிமன்றத்தில் ரூபாவுக்கு எதிராக அவசர மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “ரோஹினி சிந்தூரிக்கு எதிராக ரூபா தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறார். ரூபா சட்ட விரோதமாக ரோஹினி சிந்தூரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்து சில புகைப்படங்களை எடுத்துள்ளார். தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரும், அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ரோஹினி சிந்தூரியின் நற்பெயரை களங்கப்படுத்தியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 500-வது பிரிவின் கீழ் ரூபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ரூபா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். ரோஹினி சிந்தூரி குறித்து செய்திகளை வெளியிடக் கூடாது என்று ரூபாவுக்கு உத்தரவிட வேண்டும்'' என கோரப்பட்டது.

இதனை ஏற்ற நீதிமன்றம், “மார்ச் 7-ம் தேதி வரை சமூக வலைதளங்கள் மூலமாகவோ, ஊடகங்கள் வாயிலாகவோ ரோஹினி சிந்தூரி குறித்து அவதூறான செய்திகளை ரூபா வெளியிடக் கூடாது'' எனக்கூறி வழக்கை, மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE