குழந்தையின் அரிய வகை நோய்க்கு சிகிச்சை: பெயர் வெளியிட விரும்பாத நபர் ரூ.11.6 கோடி நன்கொடை

By செய்திப்பிரிவு

மும்பை: கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த சாரங் மேனன் மற்றும் ஆதித்தி நாயர் தம்பதி மும்பையில் வசிக்கின்றனர். இவர்களின் 15 மாத குழந்தை நிர்வானுக்கு ‘ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி’ என்ற அரிய வகை மரபணு கோளாறு ஏற்பட்டது.

இது உடலில் உள்ள தசைகளை பலவீனமடையச் செய்து இயங்க முடியாமல் ஆக்கும். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ.17.5 கோடி செலவாகும். இவ்வளவு அதிக தொகை செலவழிக்க அவர்களுக்கு வசதி இல்லாததால், ஆன்லைன் மூலம் பலரிடம் நன்கொடை வசூலிக்க முடிவு செய்தனர். இதற்காக ‘மிலாப்’ என்ற கிரவுட் ஃபண்டிங் தளத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு நன்கொடை அளிக்கும்படி மலையாள நடிகை ஆஹனா கிருஷ்ணாவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். ‘‘17 லட்சம் பேர் தலா ரூ.100 நன்கொடை வழங்கினால் ரூ.17 கோடி கிடைத்து விடும். இது மிகவும் சாத்தியமானது’’ என அவர் கூறியிருந்தார்.

மிலாப் கிரவுட் ஃபண்டிங் தளத்தில் 56 ஆயிரம் பேர் நன் கொடை வழங்கினர். இதன் மூலம் ரூ.15 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. அதில் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் மட்டும் ரூ.11 கோடியே 60 லட்சம் வழங்கியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துள்ள குழந்தையின் பெற்றோர், ‘‘தங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றும், சிகிச்சை செலவுக்கு தங்களுக்கு இன்னும் ரூ.80 லட்சம் மட்டுமே தேவை ’’ என கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE