கர்நாடகாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் கடும் மோதல் - சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதால் சர்ச்சை

By இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருப்பவர் ரூபா ஐபிஎஸ். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி ச‌சிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் ஷாப்பிங் சென்றதாக புகார் எழுப்பியதால் ரூபா பிரபலமானார்.

இந்நிலையில் ரூபா ஐபிஎஸ் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ரோஹினி சிந்தூரி, மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்த போது அப்போது அமைச்சராக இருந்த ம.ஜ.த. கட்சியை சேர்ந்த‌ சா.ரா.மகேஷ் (இப்போது எம்எல்ஏ) உடன் மோதல் போக்கை கடைபிடித்தார். தற்போது அவருடன் உணவகம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கிறார். இருவருக்கும் இடையே திடீரென சமரசம் ஏற்பட்டது எப்படி?' என கேள்வி எழுப்பி, இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

மேலும் ரூபா ஐபிஎஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரோஹினி சிந்தூரியின் 10-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தார். அத்துடன், ''ரோஹினி சிந்தூரி கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார். இது சட்டப்படி தவறு. இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் புகார் அளித்துள்ளேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

ரூபா மற்றொரு பதிவில், ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியை ரோஹினி காதலித்ததாக கூறப்பட் டது. சிபிஐ அறிக்கையிலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பில் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். டி.கே.ரவி இறந்த பிறகு அவரது எண்ணை ‘பிளாக்' செய்துள்ளார். தன் மீது குற்றம் இல்லாவிடில் ஏன் இவ்வாறு செய்திருக்க வேண்டும்?'' என்றும் கேள்வி எழுப்பினார். லோக் ஆயுக்தாவில் ரோஹினி மீது புகார் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் கூறியதாவது: 'நான் யாருக்கும் எனது புகைப்படங்களை அனுப்பவில்லை. ரூபா பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து எடுக்கப்பட்டவை. நான் எந்தெந்த அதிகாரிகளுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பினேன் என பெயரை வெளியிட வேண்டும். எனது தனிப்பட்ட படங்களை பகிர்ந்ததன் மூலம் அவரின் தரம் என்னவென்று தெரிந்துவிட்டது.

எனது படங்களை சமூக வலைதளங்களில் தவறான கண்ணோட்டத்துடன் பகிர்ந்தது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றம். அவர்மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன். மனநிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊடக வெளிச்சத்துக்காக அவர் போடும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘‘இரு பெண் உயரதிகாரிகளும் தெரு சண்டை போடுவதை போல நடந்து கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE