ஆண், பெண் இருவருக்கும் சமமான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘தற்போது நமது நாட்டில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களுக்கான திருமண வயது 18 என்றும் உள்ளது.

இந்த நிலை மாறவேண்டும். எனவே, ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உத்தரவிட்டார். அவர் மேலும் கூறும்போது, ‘‘ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மனுதாரர் கோரியிருக்கிறார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவையோ, சட்டத்தையோ பிறப்பிக்க முடியாது. இந்த மனுவை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. எனவே, இதுதொடர்பாக தகுந்த வழிகளை மனுதாரர் பின்பற்றலாம்’’ என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE