புதுடெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இளைஞர்களின் கனவை நனவாக்கும் வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் தொழில் முனைவுச் செயல்பாட்டையும் முதலீட்டையும் ஊக்கப்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒரேவிதமான வெளிப்படைத் தன்மையில் செயல்படவில்லை. சில மாநிலங்கள் அதன் கடந்த காலத்தை இன்னும் பற்றிக் கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால், தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளின் பட்டியலில் 63-வது இடத்திலிருந்து 1-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்.
தொழில்நுட்பங்கள் மூலம் சாமானிய மக்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இன்று மத்திய அரசு மானியம் இடைத்தரகரின் கைகளுக்குச் செல்லாமல் நேரடியாக மக்களின் கைகளுக்குச் செல்கிறது. தொழில்நுட்பம் சாமானிய மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.