பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த ராணுவ சலவை தொழிலாளியிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் சலவை தொழிலாளியாக பணியாற்றிய அலிம் கான், இந்திய - சீன எல்லையில் உள்ள முகாமில் பணியில் இருந்தார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு சில ரகசிய ஆவணங்களை அவர் அளித்த போது பிடிபட்டார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அபித் ஹூசைன் என்பவர் அலிம் கானிடம் இருந்து ரகசிய ஆவணங்களை பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அலிம் கான் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் அவர் மீதான வழக்கு விசாரணையை ராணுவ நீதிமன்றத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: அழகான கல்லூரி மாணவிகள், பாலியல் தொழிலாளிகளை உளவாளிகளாக ஐஎஸ்ஐ அமைப்பு நியமித்து வருகிறது. இந்த பெண்கள் சமூக வலைதளங்கள் மூலமாக இந்திய ராணுவ வீரர்களுக்கு வலை வீசி வருகின்றனர். இதுபோன்ற விவகாரங்களை இந்திய ராணுவமும் உளவுத் துறையும் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல்களை அளிக்கும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE