புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இன்று (பிப்.19) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையையும் சிபிஐ தாக்கல் செய்தது.
தற்போது சிசோடியாவை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சிசோடியா ட்விட்டரில் நேற்று கூறியதாவது: சிபிஐ விசாரணைக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பேன்.
மத்தியில் உள்ள பாஜக அரசு எனக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை என விசாரணை அமைப்புகளின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்துகி றது. சோதனை நடத்தியும் எனக்கு எதிராக எந்த சாட்சியமும் கிடைக்கவில்லை. டெல்லி குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் இவற்றை எல்லாம் நிறுத்த விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.