புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் வேளாண் விழா-2023 மற்றும் 33-வது மலர், காய், கனிக்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா ஞாயிறு இரவு நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு மலர் ராஜா, ராணி உள்ளிட்ட பரிசுகள் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது. புதுச்சேரி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவியை 11 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்குவோம். மாணவர்களுக்கான சைக்கிள் வரும் 16-ம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும். புதுச்சேரியில் விளை நிலங்கள் 30 ஆயிரம் ஹெக்டேராக இருந்து நகர விரிவாக்கத்தால் குறைந்துவிட்டது.
ஆனால், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாடித்தோட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கான மானியம், பசுக்கள் வழங்குதல், பால் கொள்முதல் விலை உயர்வு ஆகியவற்றை செயல்படுத்தியுள்ளோம்.
» பெரம்பூர் கொள்ளைக்கும் திருவண்ணாமலை கொள்ளைக்கும் தொடர்பா? - விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறை
» WT20 WC 2023 | பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள், படித்த இளைஞர்கள் உதவிட வேண்டும். பால் பண்ணை வைக்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். அதிக விலை கொடுத்தும் வெளி மாநில பால் புதுச்சேரிக்கு கிடைக்காத நிலை உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.