ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு 187 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு 187 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ''கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 125 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். பாதுகாப்புப் படை தரப்பில் 117 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக 111 பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2022-ல் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 187 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு முந்தைய 2021-ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 129 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் 95 பதில் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். மேலும், பாதுகாப்புப் படையினர் 100 என்கவுன்டர்களை மேற்கொண்டுள்ளனர். 2021-ல் ஜம்மு காஷ்மீரில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE