இந்தியாவில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தப்படுத்தும் அவல நிலை தொடர்ந்துவருகிற நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை 2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இனி இந்தப் பணிகள் முழுமையாக இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படக்கூடிய கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து நகரங்களிலும், சிறு நகரங்களிலும் பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று அவர் அறிவித்துள்ளார். இந்தப் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் இந்த இயந்திரங்களை வாங்கும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடை, கழிவுத் தொட்டிகளில் இறங்கி வேலை செய்யும்போது 400 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.