பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்துக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு கடையை மூடி விட்டு வீடு திரும்புகையில், பஸ் நிலையம் பின்புறம் பாம்பாட்டி ஒருவரை பார்த்த மணிகண்டா, அவரிடம் இருந்த பாம்பை தனது கழுத்தின் மீது போடும்படி கெஞ்சினார்.

ஆனால், பாம்பாட்டி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் மணிகண்டா தொடர்ந்து பணம் தருவதாக கூறி அவரை வற்புறுத்தினார். ‘ஒரே ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக் கொள்கிறேன் தயவுசெய்து பாம்பை எனது கழுத்தின் மீது ஒரு நிமிடம் மட்டும்விடு’ என்று கெஞ்சியுள்ளார்.பாம்பாட்டியும் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டார்.

பாம்பை கழுத்தின் மீது வைத்ததும் செல்ஃபி எடுத்துக்கொண்டார் மணிகண்டா. அதன் பின்னர் பாம்பை தோளிலிருந்து திரும்ப எடுக்க முற்பட்டபோது அது மணிகண்டாவை எதிர்பாராத விதமாக தீண்டிவிட்டது.

இதையடுத்து அலறித்துடித்த அவரை ஓங்கோல் அரசு மருத்து வமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கந்துக்கூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE