பணமோசடி வழக்கில் திரிணமூல் காங். செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலே கைது - அமலாக்கத் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலேவை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

மக்களிடம் இருந்து திரட்டிய பணத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி குஜராத் போலீசாரால் சாகெட் கோகலே கைது செய்யப்பட்டார். அகமதாபாத் சிறையில் உள்ள அவர் பணமோசடி வழக்கின் கீழ் தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சாகெட் கோகலேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குஜராத்தின் மோர்பி நகர ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் பயணச் செலவு தொடர்பாக போலியான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் குஜராத் போலீசார் அவரை இருமுறை கைது செய்தனர். இந்நிலையில், அமலாக்கத் துறையும் அவரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE