லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்குகள்: நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், மத்திய அரசின் லுக்அவுட் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் லீனா மணிமேகலை, தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் காளி என்ற ஆவணப்பட போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டரில், கையில் சிகரெட்டுடன் காளி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டருக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து Arrest Leena Manimegalai என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தியதாககூறி லீனா மணிமேகலை மீது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காளி போஸ்டருக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டது.

காளி ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது கிரிமினல் சதி, வழிபாட்டு முறைகளில் குற்றத்தை தூண்டுதல், மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் உத்தரப்பிரதேசத்தின் ஹஜ்ரத்கஞ்ச் உள்ளிட்ட காவல்நிலையங்களில் 6-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி லீனா மணிமேகலை சார்பில் கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லீனா மணிமேகலை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், "லீனா மணிமேகலை பல்வேறு விருதுகளைப் பெற்ற பிரபலமான இயக்குனரும் கவிஞரும் ஆவார். தற்போது கனடா நாட்டின் யார்க் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். குறிப்பிட்ட சில உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில்தான் காளி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் போஸ்டரும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் வெளியிடப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது அல்ல. இவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

மனுதாரர் தரப்பு வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், "காளி பட போஸ்டர் விவகாரத்தில் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு எதிராக டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட உள்ளிட்ட மாநிலங்களில் பதியப்பட்டுள்ள 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் மத்திய அரசின் லுக்அவுட் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் கூடுதலாக முதல் தகவல் அறிக்கைகள் புதிதாக பதிவு செய்யப்பட்டாலும் அதிலும் நடவடிக்கை எடுக்க கூடாது எனக்கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றிணைத்து, லீனா மணிமேகலை விரும்பும் இடத்தில் விசாரணையை தொடர சட்டப்பிரிவு 482- ன் கீழ் மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE