நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

பாஜக கூட்டத்தில் முடிவு: முன்னதாக பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஜன 16, 17 தேதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் 2023ல் நடைபெறவுள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய உழைக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த 9 மாநிலங்களில் 5ல் ஏற்கெனவே பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளது.

காங்கிரஸுக்கு முக்கியமான 3 மாநிலத் தேர்தல்: அண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுக்கடுக்கான தேர்தல் தோல்விகளை சந்தித்துவிட்ட காங்கிரஸுக்கு இந்த தேர்தல் வெற்றி மிக அவசியமானது என்று அரசியல் நிபுணர்கள் கூறினர். இந்நிலையில் அடுத்த ஆண்டு (2024 மே மாதம்) நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் இந்த 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் காங்கிரஸ் உள்ளது.

நாகாலாந்து நிலவரம் என்ன? நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2018-ம் ஆண்டு நாகாலாந்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இம்முறை ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. கூட்டணி வலுவாக அமைந்தால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது.

திரிபுராவில் திருப்பம் வருமா? இடதுசாரிகளின் கோட்டை என ஆண்டாண்டு காலமாக அறியப்பட்ட திரிபுராவில் இப்போது பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. கட்சித் தாவல்கள் நடைபெறும் ஆனால் திரிபுராவில் நடந்ததுபோல் எங்குமே நடந்திருக்கிறாது. காங்கிரஸ் கூடாரமே பாஜகவாக மாற 2018 தேர்தலில் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைந்தது. காங்கிரஸார் செய்த பிழையால் திரிபுராவில் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சி அமைந்தது. இடதுசாரிகள் மீண்டெழுவார்களா? காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா என்பதெல்லாம் இப்போதைக்கு அங்கே கணிக்க முடியாத சூழலாகவே உள்ளது.

காங்கிரஸுக்கு வாய்க்குமா? மேகாலயா மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் என்பிபி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அங்கு காங்கிரஸ் இந்த முறை ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறது.

இத்தகைய சூழலில் தான் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக அமித் ஷாவும், பிரதமர் மோடியும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE