ஜோஷிமத் துயரம் | மறுகுடியமர்வு நடவடிக்கை தீவிரம் - மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

By செய்திப்பிரிவு

ஜோஷிமத்: நிலவெடிப்பு காரணமாக ஜோஷிமத் நகர கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியமர்த்துவதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் இமையமலை அடிவாரத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதுவரை 760 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதும், இவற்றில் 147 கட்டிடங்கள் வசிப்பதற்கு ஏற்றவை அல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற கட்டிடங்களில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜோஷிமத்தில் உள்ள முகாமுக்கு நேற்றிரவு சென்ற மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குராணா, முகாமில் போதுமான வசதி உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், விரிசல் காரணமாக அவர்களின் வீடுகள் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு எத்தகைய மாற்று தேவை என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர்களாடு சேர்ந்து இரவு உணவு உண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷு குராணா, ''முகாமில் தங்கி உள்ள மக்களிடம் அவர்கள் விரும்பும் நிவாரணம் குறித்து கேட்டறிந்தேன். சிலர் பணமாக கொடுக்குமாறு கோரினர். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு நிலம் இருப்பதாகவும், அங்கே வீடு கட்டிக்கொள்ள விரும்புவதாகவும் கூறினர். வேறு சிலர், ஜோஷிமத் பகுதியிலேயே வேறு இடத்தில் தங்களை மறுகுடியமர்த்துமாறு கேட்டுக்கொண்டனர்.

மக்களின் விருப்பப்படி அவர்களுக்கான நிவாரணத்தை அளிக்க அரசு விரும்புகிறது. எனவேதான் அவர்களின் விருப்பம் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கூறியதை கருத்தில் கொண்டு அரசு முடிவு எடுக்கும். பணமாகவோ அல்லது குடியிருப்பாகவோ அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்'' என தெரிவித்தார்.

சந்தை மதிப்பின்படி இழப்பீடு: நிலவெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் முதல்கட்ட நிவாரணமாக தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக, சமோலி மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு சந்தை மதிப்பின்படி வழங்கப்படும் என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷி மத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. புதைந்திருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன் முழு விவரம்: கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ. மண்ணில் புதைந்த ஜோஷிமத் நகரம் - அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE