ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தில் நிலுவை தொகை வழங்க அரசுக்கு அவகாசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருத்தப்பட்ட ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 25 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி கூறும்போது, “ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு நிலுவைத் தொகையை வழங்குவதற்கான பணிகள் நிறைவு பெற்று விட்டன. மார்ச் 15-ம் தேதிக்குள் ராணுவத்தின் 25 லட்சம் ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விடும்" என்றார். அப்போது நீதிபதிகள் கூறும்போது, “ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கான அனைத்து நிலுவைத் தொகைகளும் மார்ச் 15-ம் தேதிக்குள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மேலும் மத்திய அரசு தாமதம் செய்யக்கூடாது" என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE