44 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் ஏ.எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கூறியதாவது:

பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்காக 104 பெயர்கள் அடங்கியபட்டியல் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இதில் 44 நீதிபதிகள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அவை 3 நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வுக்கு நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளின் பெயர்கள் தொடர்பான பட்டியலின் நிலை என்ன என்று அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு வெங்கட்ரமணி பதில் அளிக்கும்போது, “இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருக்கிறது. எனவே இந்த வழக்கை சிறிது காலம் தள்ளிவைக்க நீதிபதிகள் அனுமதிக்க வேண்டும். என்னிடம் சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அதிலும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்" என்றார். அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE