நியமன கவுன்சிலர்களை ஓட்டு போட அனுமதிப்பதாக ஆம் ஆத்மி - பாஜக கடும் அமளி: டெல்லி மேயர் தேர்தல் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேயர் தேர்தலில் நியமன கவுன்சிலர்களை ஓட்டுப்போட அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களில் வென்றது. இதன் மூலம் பாஜகவின் 15 ஆண்டு கால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடந்த மாதம் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் டெல்லி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மாநகராட்சி கூட்டம் நேற்று கூடியது. ஆம் ஆத்மி சார்பில் மேயர்வேட்பாளராக செல்லி ஒபராயும்,துணை மேயர் வேட்பாளராக முகமது இக்பாலும் அறிவிக்கப்பட் டிருந்தனர். பாஜக சார்பில் ரேகாகுப்தா மற்றும் கமல் பத்கி ஆகியோர்மேயர் மற்றும் துணை மேயர்வேட்பாளராக அறிவிக்கப்பட் டிருந்தனர்.

மேயர் தேர்தலை நடத்த தற்காலிக அவைத் தலைவராக முகேஷ் கோயலை நியமிக்கும்படி ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்தது. ஆனால் பாஜக கவுன்சிலர் சத்யா சர்மாவை அவைத் தலைவராக டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா நியமித்தார்.

நேற்றைய கூட்டத்தில் டெல்லி மாநகராட்சிக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர் கள் உறுதிமொழி எடுப்பதற்கு முன் பாகவே, நியமன கவுன்சிலர்கள் உறுதி மொழி எடுப்பதற்கு அவைத்தலைவர் சத்ய சர்மா அழைத்தார். இது அவர்களை மேயர் தேர்தலில் ஒட்டுப்போட வைக்கும் முயற்சி என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

இதனால் அவையில் அமளி நிலவியது. ஆம்ஆத்மி மற்றும்பாஜக உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த அமளி நீடித்ததால் மேயர் தேர்தல் ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பாக அவை ஒத்திவைக்கப்பட்டது. மேயர் தேர்தலை நடத்துவதற்கான புதியதேதியை துணைநிலை ஆளுநர்அறிவிப்பார் என தெரிவிக்கப் பட்டது.

இது குறித்து டெல்லி முதல்வர்அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘‘அரசியல் சாசனத்தின்243ஆர் பிரிவு நியமன உறுப்பினர்கள் அவையில் ஓட்டுப்போட தடை விதிக்கிறது. அவர்களை ஓட்டுப்போட வைக்கும் முயற்சி அரசியல் சாசனத்துக்கு எதிரானது’’ என்றார்.

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘டெல்லிமாநகராட்சியில் நீங்கள் செய்ததைமறைக்க எவ்வளவு தூரத்துக்குகீழ்த்தரமாக பாஜக உறுப்பினர்கள் இறங்குவர்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களை உறுதிமொழி எடுக்கவிடாமல், நியமன கவுன்சிலர்களை உறுதிமொழி எடுக்க அழைப்பது சட்டவிரோதம்.

மக்கள் அளித்த தீர்ப்பை நீங்கள் மதிக்க முடியாது என்றால், எதற்காக தேர்தல் நடத்தினீர்கள்? என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE