'தங்களுக்கு இது பெரும் அவமானம்' - விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபரை டிஸ்மிஸ் செய்த அமெரிக்க நிறுவனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபோதையில் சக பயணிமீது விமானத்தில் சிறுநீர் கழித்த நபரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது அமெரிக்க நிறுவனம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்து கொண்டிருந்தது. அப்போது பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த ஒரு பயணி, சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர் மது போதையில் இருந்தார். இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு புதிய ஆடைகளை வழங்கிய பணிப்பெண்கள் அதே இருக்கையிலேயே அமருமாறு தெரிவித்தனர். விமான இருக்கைகள் முழுவதும் நிரம்பியிருந்ததால் அவ்வாறு அவர்கள் தெரிவித்தார். விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையையும் ஏர் இந்தியா நிர்வாகம் எடுக்கவில்லை. இது அந்த பெண்ணுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு அந்த பெண் புகார் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து அந்த நபர் அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விமானத்தில் சிறுநீர் கழித்த நபரை அவர் வேலைபார்த்துவந்த அமெரிக்க நிறுவனம் வேலையில் இருந்தே நீக்கியுள்ளது. ஷங்கர் மிஸ்ரா என்ற அந்த நபர் மதுபோதையில் சக பயணி மீது விமானத்தில் சிறுநீர் கழித்துள்ளார். அவரின் இந்த அநாகரீக செயலை அறிந்து அவர் வேலை பார்த்துவந்த அமெரிக்க நிதி சேவை நிறுவனமான 'வெல்ஸ் போர்கோ' ஷங்கர் மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், இது தங்களின் நிறுவனத்துக்கு பெரும் அவமானம் என்றும் ஷங்கர் மிஸ்ராவின் செயலை கடுமையாக சாட்டியுள்ளது அந்நிறுவனம்.

ஷங்கர் மிஸ்ரா, மும்பையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE