ஷ்ரத்தா கொலை வழக்கு | அஃப்தாபுக்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவு வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் அவரது காதலர் அஃப்தாபுக்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வழக்கின் பின்னணி: மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஷ்ரத்தா வாக்கரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த அஃப்தாப் பூனவாலாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரும் புதுடெல்லிக்குச் சென்று தனியாக வசித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் இவர்கள் வசித்து வந்த நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை வந்துள்ளது. கடந்த மே 18-ம் தேதி இரவு ஏற்பட்ட சண்டையை அடுத்து, அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி உள்ளார்.

அஃப்தாப் கைது: ஷ்ரத்தாவிடம் இருந்து வழக்கமாக வரும் தொலைபேசி அழைப்புகள் நின்றுபோனதை அடுத்து, அவரது தோழி ஒருவர் ஷ்ரத்தாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டெல்லி சென்ற ஷ்ரத்தாவின் குடும்பத்தினருக்கு ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டெல்லி போலீசாரால் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக மகாராஷ்ட்டிர போலீசாரும் வழக்கு பதிந்துள்ளனர். காவல் துறை விசாரணையில் ஷ்ரத்தாவை கொலை செய்ததை அஃப்தாப் ஒப்புக்கொண்டார்.

உண்மை கண்டறியும் சோதனை: அஃப்தாபுக்கு கடந்த 1ம் தேதி உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு முன்பாக, அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டன. அவர் அளித்த பதில்களின் அடிப்படையில் குறுக்குக் கோள்விகளும் கேட்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில், டெல்லி காவல் துறையிடம் அவர் ஏற்கெனவே கூறிய அதே பதில்களை கூறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஷ்ரத்தாவை திட்டமிட்டே தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது புதுடெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஃப்தாப், சிறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE