ஜெமா: சிக்கமின் வடக்கில் உள்ள ஜெமா என்ற இடத்தில் நேரிட்ட வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவம் இதனை தெரிவித்துள்ளது.
ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று காலை நேரிட்ட இந்த விபத்து குறித்து ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சேட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்தை நோக்கி 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். ஜெமா என்ற இடம் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, செங்குத்தான சரிவு கொண்ட ஒரு திருப்பத்தில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் இளநிலை அதிகாரிகள். 13 பேர் ராணுவ வீரர்கள்.
இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகள் துரதமாக மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்த 4 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் தனது உறுதியான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் இரங்கல்: இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வடக்கு சிக்கிமில் நேரிட்ட சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் சேவைக்கும் உறுதிக்கும் நாடு அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
» கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் - இந்திய ராணுவம் சுற்றறிக்கை
» வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டமாக கரோனா பரிசோதனை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பிரதமர் மோடி அஞ்சலி: சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.