ஹைதராபாத்: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மதுபான கொள்கையில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்தனர். மேலும் அவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.2.82 கோடி பணம், 1.80 கிலோ தங்க நகைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதன் அடிப்படையில், டெல்லியில் தொழிலதிபர் அமித் அரோரா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ‘சவுத் குரூப்’ என்கிற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பலருக்கு லஞ்சம் வழங்கியதாக ஒப்புக்கொண்டார். இந்த சவுத் குரூப் நிறுவனம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா உட்பட பல முக்கிய பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், ரூ.100 கோடி ஊழல் பணத்தை விஜய்நாயர் என்பவர் மூலம் இவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர். அதில், கவிதாவின் பெயர் 28 இடங்களில் இடம்பெற்றுள்ளன.