புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தின் 15-வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்விந்தர் சிங் சுக்கு அண்மையில் பதவியேற்றார். இதையடுத்து தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருந்தார். இதனிடையே சுக்விந்தர் நேற்று முன்தினம் டெல்லியில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் சுக்விந்தர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவரது நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இமாச்சலபிரதேச அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 135 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 2 உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,559 ஆக உள்ளது.