உயர்கல்வி நிறுவனப் பணியிலுள்ள பட்டியல் சமூகத்தினர் எண்ணிக்கை என்ன? - மக்களவையில் எம்.பி ரவிகுமார் கேள்வி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சமூகத்தினர் (எஸ்சி) எவ்வளவுபேர் பணியில் உள்ளனர் என திமுக எம்பி டி.ரவிகுமார் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு பதில் சொல்லாமல் மழுப்புவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ’டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த முதல்வர்களின் எண்ணிக்கை என்ன? இதில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் அளிக்கவும். மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த துணைவேந்தர் யாராவது இருக்கிறார்களா? அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் தரவும்.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டியல் சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை அதில், உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் சதவீதம் என்ன? காலியிடங்களை நிரப்ப அரசு எடுத்த அல்லது எடுக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" எனக் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்திருக்கும் கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்னா தேவி கூறும்போது, ‘‘முதல்வர் மற்றும் துணைவேந்தர் பதவிகள் ஒற்றை கேடர் பதவியாகும்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் முதல்வர் நியமனம் மத்திய பல்கலை மானியக் குழு(யூஜிசி) ஒழுங்குமுறை, 2018 இல் உள்ள விதிமுறைகளின்படி செய்யப்படுகிறது. அதேபோல், துணைவேந்தர் நியமனம் அந்தந்த மத்திய பல்கலைக்கழகத்தின் சட்டங்கள் போன்றவற்றின்படி செய்யப்படுகிறது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அதன் பணியிடங்களை நிரப்புமாறு கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

காலியிடங்களை நிரப்ப அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவதுடன், அமைச்சகம் மாதாந்திர கண்காணிப்பு பொறிமுறையை அமைத்துள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் (பேராசிரியர் பணியிடத்தில் இடஒதுக்கீடு) சட்டம் 2019, 09.07.2019 அன்று பல்கலைக்கழகத்தை ஒரு பிரிவாகக் கருதி பட்டியலைத் தயாரிப்பதை உறுதிசெய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த சட்டத்தின்படி, அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிவிலக்குகள் தவிர அனைத்து உயர்நிலை நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தும்.

மேலும், இச்சட்டத்தின்படி, மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடத்தில் நேரடி ஆட்சேர்ப்பில் அனைத்து பதவிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, எந்த இட ஒதுக்கீடு பதவியும் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படவில்லை.’ எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து கூறிய எம்பி ரவிகுமார், ’நாடாளுமன்றத்திலேயே இப்படி விவரம் தராமல் மூடி மறைப்பதற்குக் காரணம் உள்ளது. இதில், உயர்கல்வித்துறையில் பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE