ம.பி. அதிர்ச்சி: 12 வயது மாணவர் மாரடைப்பால் மரணம்

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12 வயது மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

மனீஷ் ஜாதவ் என்ற அந்தச் சிறுவன் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழன் மதியம் அவர் பள்ளியில் தனது சகோதரருடன் மதிய உணவு உண்டார். மதியம் 2 மணியளவில் பள்ளிப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென மயங்கிவிழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி நிர்வாகிகள் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். மனீஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் காட்டிய அறிகுறிகள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உணர்த்துவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் மனீஷின் பெற்றோர் உடற்கூராய்வுக்கு அனுமதிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இவ்வளவு இளம் வயதில் மாரடைப்பால் மரணம் ஏற்படுவது இதுவே முதன்முறை என்று தெரிகிறது.

இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் தங்கள் இன்னுயிரை இழப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார மையத்தின் தரவுகள். இதில் ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அண்மைக்காலமாக இளம் வயதினருக்கும் மாரடைப்பு அதிகமாக ஏற்படும் போக்கு நிலவுகிறது. அனால், மத்தியப் பிரதேசத்தில் 4-ஆம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் இறந்தது அரிதினும் அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE