புதுடெல்லி: குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, அயோத்திக்கு சென்றுவிட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவகர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கோத்ரா ரயில் நிலையத்தில், இந்த ரயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் சிக்கி 59 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலர் சிறையில் உள்ளனர். இவர்களில் ஒருவர் பரூக் அப்துல் சத்தார் இப்ராகிம் காஜி. சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு தீ வைத்தபின், அதில் இருந்தவர்கள் தப்பி வெளியேறாதபடி, கூட்டத்தினரை கல் எறிய தூண்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பரூக் அப்துல்லுக்கு ஜாமீன் வழங்க சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், ஒரு முறைகூட ஜாமீன் பெறாமல், 17 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்ததற்காக, பரூக்குக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.